எண்ணூரில் 38 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி: முதல்வர் துவக்கி வைத்தார்

திருவொற்றியூர்: எண்ணூரில் 38 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அதன்படி அதற்கான பணிகள் தொடங்கியது. வடசென்னையில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் காசிமேடு முதல் எண்ணூர் வரை தூண்டில் வளைவு அமைக்க அரசு முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. காசிமேடு முதல் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் வரை ஏற்கனவே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்படாததால் புயல் மழை காலங்களில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எர்ணாவூர் முதல் எண்ணூர் வரை கற்களை கொட்டி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 38.38 கோடி செலவில், இந்த பகுதியில், 9 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.  இதன்படி எண்ணூரில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கே.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும் இந்த பணி 12 மாதங்களில் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: