அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 14,649 சிசிடிவி கேமரா பொருத்தம்: கமிஷனர் இயக்கி வைத்தார்

அண்ணாநகர்: அண்ணாநகரில் 69.37 கோடியில் புதிதாக 14,649 சிசிடிவி கேமராக்களை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வில்லிவாக்கம் ஆகிய காவல் சரகங்கள் உள்ளன. இந்த சரகங்களில் 69.37 கோடி மதிப்பீட்டில் கடந்த ஒரு மாதத்தில் 50 மீட்டர் இடைவெளியில் புதிதாக 14,649 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை சிசிடிவி கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு புதிய சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிகளை துவக்கி வைத்து பேசுகையில்,

‘‘இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதியாக அண்ணாநகர் காவல் மாவட்டம் விளங்குகிறது. அண்ணாநகர் பகுதியில் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் பெருகி இருந்தன. தற்போது  சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகளால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை ஆணையர் சுதாகர் மற்றும் உதவி கமிஷனர்கள் குணசேகர், ஜான்சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: