சென்னை: அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு குடிசைமாற்று வாரியம் வீடு வழங்கியது. அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்நிலையில் அதே பகுதி வக்கீல்கள் துளசிராமன் (36), சுரேஷ் என்ற முனிகுட்டி (34), பிரவின்குமார் (37), வேல்முருகன் (41) மற்றும் அடையாறு தாமோதரபுரம் சத்யா (47) ஆகியோர் இவரது வீட்டை இடித்து விட்டு முன்பகுதி நிலத்தை தங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி ஜெயராமன் மற்றும் அவரது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த ஜெயராமன் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் அசோகன் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட துளசிராமன் உள்பட 5 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.