செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: தாயை கத்தியால் குத்தி 11 சவரன் நகை பறிப்பு: ஐகோர்ட் வக்கீலிடம் விசாரணை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியில் செலவுக்கு பணம் தராத தாயை கத்தியால் குத்தி 11 சவரன் நகைகளை வக்கீல் பறித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீலிடம் விசாரித்து வருகின்றனர். தண்டையார்பேட்டை, கே.ஜி.கார்டனை சேர்ந்தவர் பங்கஜம்மாள் (55). இவரது மகன் மாரிமுத்து (31). உயர்நீதிமன்ற வக்கீல். கடந்த சில நாட்களாக மாரிமுத்து தனது தாயிடம் செலவுக்கு 5 லட்சம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  நேற்று முன்தினம் மாலை மாரிமுத்து தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது தாயின் வலது கையில் கத்தியால் பலமாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரது கழுத்தில் இருந்த 11 சவரன் நகையை பறித்து கொண்டு மாரிமுத்து தப்பி ஓடிவிட்டார்.

பங்கஜம்மாள் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் மாரிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செலவுக்கு 5 லட்சம் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெற்ற தாயையே உயர்நீதிமன்ற வக்கீல் ஒருவர் கத்தியால் குத்தி 11 சவரன் நகைகளை பறித்துச்சென்ற கொடூர சம்பவம் தண்டையார்பேட்டை கே.ஜி.கார்டன் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories: