செல்லியம்பாளையம் சாலையில் சேதமடைந்த மின்விளக்குகள்

ஆத்தூர், பிப்.21:ஆத்தூர் செல்லியம்பாளையம் தேசிய நெஞ்சாலையில் மின் விளக்குகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் இருந்து, சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை செல்லும் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், முறையான பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் எரியாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்கு கழன்று அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. இந்த சாலையில், போதிய மின்விளக்கு இல்லாததால், அதிக அளவு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து செல்லியம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பிரிவு சாலை ஆத்தூர், நரசிங்கபுரம், ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் அதிக அளவில் செல்லும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பல மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு ேநரங்களில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மின்விளக்குகளை சரி செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: