மேட்டூர், பிப்.21:மேட்டூர் நகராட்சியை கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். கட்டிட தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 2ஆண்டுகளாக வழங்கப்படாத விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். அரசு ஆணைப்படி விடுப்பு எடுத்தாலும் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடும் துப்புரவு ஆய்வாளர் மீதும், பெண் பணியாளர்களை உதாசீனப்படுத்தும் துப்புரவு மேற்பார்வையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்தும், அவர்களின் கடன் சங்கத்தில் செலுத்தப்படாமல் உள்ள ₹40 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.