சேலம், பிப். 21: நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படிநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 1,400 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆண், பெண் வாக்காளர்கள் என பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 11 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது, 24 வாக்குச்சாவடி அமைவிடம் மாற்றம் செய்யப்படவுள்ளது. 135 வாக்குசாவடி மையங்களின் பெயர் மாற்றம் செய்வது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் இருந்து பட்டியல் பெறப் பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை வருகிற 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது, திமுக மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் பேசுகையில், சேலம் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் உயிரோடு உள்ள வாக்காளர்களை இறந்தவர்கள் என பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்களுது நிர்வாகிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான பட்டியலை வழங்குகிறோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். உடனே அந்த பட்டியலை கொடுங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் கலையமுதன், சுபாஷ், கணேசன், அதிமுக நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி, பாஜ நிர்வாகி கோபிநாத், தேமுதிக நிர்வாகி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகி சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.