திருமங்கலம், பிப்.21: மதுரை-கன்னியாகுமரி இரட்டைவழி ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதால், வடகரை தரைபாலத்தில் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இரட்டை அகல ரயில்பாதை பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக ஏற்கனவே உள்ள ரயில் மேம்பாலம், தரைபாலங்கள் அருகே புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து கள்ளிக்குடி வரையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. திருமங்கலம் நகர் அருகேயுள்ள வடகரை செல்லும் பாதையில் ஏற்கனவே ரயில்வே தரைபாலம் அமைந்துள்ளது. இந்த தரைபாலம் வழியாக பாண்டியன் நகர், வடகரை, வடகரை புதுார், நடுக்கோட்டை வழியாக காரியாபட்டி சாலையை அடையலாம்.