திருமங்கலம், பிப். 21: செக்காணுரணியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மெக்கானிக் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பஸ்களின் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக செக்காணுரணியில் டிப்போ துவக்கப்பட்டது. உசிலம்பட்டி, திருமங்கலம் கிளைகளிலிருந்து பஸ்கள் பிரிக்கப்பட்டு புதிய இந்த டிப்போ துவக்கப்பட்டது. 26 பஸ்களுடன் துவக்கப்பட்ட இந்த டிப்போவில் தற்போது 42 பஸ்கள் உள்ளது. இதில் மூன்று வெளியூர் பஸ்களாகும். டிரைவர், கண்டக்டர்கள் போக தொழில்நுட்ப பணிகளான மெக்கானிக், எலெக்ட்ரிசியன் 5 பேர் தற்போது பணிமாறுதலாகி போய் விட்டனர். இதனால் தற்போதுள்ள 7 ஊழியர்களும் மாற்றி, மாற்றி பணிகளை செய்ய வேண்டியுள்ளது.