மதுரை, பிப். 21: அமைச்சருக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த பெண் நீதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நீதிதேவதையின் படத்திற்கு சமூக சேவகி நர்மதா பாலாபிஷேகம் செய்தார். ஓசூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ண ரெட்டி. தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி போராட்டம் நடத்தினார். அப்போது பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.