திமுக ஆட்சியில் கொண்டு வந்ததால் முடக்கி வைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் செயற்கை தட்டுப்பாட்டால் நா வறளும் மக்கள்

திண்டுக்கல், பிப். 21:திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. போதிய பருவமழையில்லாமல் உள்ளூர் நீராதாரங்கள் வற்றியதால் நிலத்தடிநீரும் குறைந்து ஆழ்துளை கிணறுகளும் கைவிட்டுவிட்டன. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீரை விலைக்கு வாங்கித்தான் தாகம் தணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இவற்றை சரிசெய்ய கோரியும், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ஐபி.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகியோர் கடந்த சட்டமன்றபேரவை கூட்டத்தில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் அர.சக்கரபாணி எம்எல்ஏ தமிழக சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் மழை அதிகரித்திடவும்சு ற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழகத்தில் ஊராட்சி முதல் நெடுஞ்சாலை வரை மரங்களை வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளும் (வடகாடு ஊராட்சி நீங்கலாக) மஞ்சநாயக்கன்பட்டி முதல் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகளும், வேடசந்தூர் தொகுதி வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை மற்றும் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் 201 குடியிருப்புகள் ஆகிய பகுதிகள் பயனடையும் வகையில் 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 34 ஊராட்சிகளுக்கும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 ஊராட்சிகளுக்கும் முழுமையாக சென்றடையவில்லை.  தற்போது இத்திட்டம் பயன்பாட்டில் இல்லை. இதனால் இத்திட்டத்திற்காக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி, குடிநீர் சேமிக்கும் இடம் ஆகியவை வெகுவாய் சேதமடைந்துள்ளது. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகள், பழநி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளுக்கு மொத்தம் 175 குடியிருப்புகளுக்கு சுமார் ரூ.18 கோடி செலவில் பாலாறு பொருந்தலாறு குடிநீர் திட்டத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு 2011ம் ஆண்டு முடிவுற்றது.

ஆனால் இத்திட்டத்தின் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக முழுமையாக எந்த கிராமத்திற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டையில் மூன்று சமுதாய கிணறு அமைக்கப்பட்டு இடையகோட்டை, வலையபட்டி, மார்க்கம்பட்டி, எல்லபட்டி, சின்னக்காம்பட்டி, குத்திலிப்பை, இ.வாடிப்பட்டி, கொ.கீரனூர், மண்டவாடி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் இடையகோட்டை நங்காஞ்சியாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இத்திட்டமும் ‘உறக்கநிலையிலே’ உள்ளது.அமராவதி, சண்முகநதி ஆறுகள் சந்திக்கும் கூட்டாற்றில் இருந்து தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்பனூத்து, புங்கமுத்தூர், வாகரை, மேட்டுப்பட்டி, மரிச்சிலம்பு, வேலம்பட்டி ஆகிய 6ஊராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்பாடின்றி உள்ளது. அத்திக்கோம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெருமாள் ஓடை உள்ளது. இங்கு திறந்தவெளி கிணறு அமைத்து காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, கொல்லபட்டி ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்நீர் போதுமானதாக இல்லை.பருவமழை பொய்த்துவிட்டதால் ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் ஆதாரங்கள் முழுவதும் முடங்கிப் போய் கிடக்கிறது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ அர.சக்கரபாணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரனை நேரில் சந்தித்து முறையிட்டார். தொடர்ந்து திண்டுக்கல்லில் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எம்எல்ஏ.க்கள் அர.சக்கரபாணி, ஐபி.செந்தில்குமார்கலந்து கொண்டு, திமுக.ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பதற்காகவே  பொதுமக்கள் நலன்கருதாது பலவற்றையும் முடக்கி வைத்துள்ளது. எனவே அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து தொப்பம்பட்டி, பழநி ஒன்றியங்களுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 70பேர் கொண்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: