ஒட்டன்த்திரம், பிப். 21: கடும் வெப்பம் காரணமாக ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் சிறுத்தை புலி, யானை, சாம்பல்நிற அணில், செந்நாய், மலைப்பாம்பு, கடமான், காட்டெருமை, குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடைகாலம் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் அதிக வெப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புக ஆரம்பித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த கடமான் ஒன்று கிணற்றில் விழுந்து பலியானது.