தூத்துக்குடி, பிப்.21: தூத்துக்குடி டூவிபுரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததால் அ.ம.மு.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதன் அருகில் நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. புதிய தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பள்ளத்தில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி அந்த பள்ளத்தை நிரப்பவேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.