திருப்பத்தூர், பிப்.21: கள்ளக்காதலியை அபகரித்ததால் ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளி, விவசாயி மீது மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டியும், மர்ம உறுப்பை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். அவரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(40), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் சிவகுமார் வெளியே சென்றார். ஆனால் காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் தனலட்சுமி தனது கணவரை பல இடங்களில் தேடி வந்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்நிலையில் நேற்று அதிகாலை ஏரிப்பகுதி வழியாக சென்ற சிலர், சிவகுமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் சிவகுமாரை யாரோ மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் சரமாரியாக வெட்டியும், அவரது மர்ம உறுப்பை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம்:
அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி குட்டியம்மாள்(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குட்டியம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான பழனி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கேரளாவிற்கு சென்று கூலிவேலை செய்து வந்தனர். பின்னர் 6 மாதங்களுக்கு முன்பு குட்டியம்மாள் மட்டும் தனது சொந்த ஊரான ஏ.கே.மோட்டூருக்கு வந்தார். இங்கு சில நாட்கள் தங்கிய நிலையில் குட்டியம்மாளுக்கும் கொலையான சிவகுமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கேரளாவில் இருந்த பழனி, குட்டியம்மாளை தொடர்பு கொண்டு மீண்டும் கேரளாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் குட்டியம்மாள் கேரளாவுக்கு செல்வதை தவிர்த்து அவரிடம் சாக்குபோக்கு சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் குட்டியம்மாள் கள்ளக்காதல் விவகாரம் பழனிக்கு தெரியவந்தது. தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வருவதை அறிந்த பழனி கடும் ஆத்திரமடைந்தார். மேலும் கள்ளக்காதலியை அபகரித்த சிவகுமாரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பழனி ஏ.கே.மோட்டூருக்கு வந்துள்ளார். நள்ளிரவு சிவக்குமார் தனது வீட்டில் இருந்து கள்ளக்காதலி குட்டியம்மாள் வீட்டுக்கு செல்வது பழனிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் ஏரிப்பகுதியில் மறைந்திருந்தார். நள்ளிரவு பைக்கில் சென்ற சிவகுமாரை பழனி வழிமறித்து மிளகாய் பொடி தூவி கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் அவரது மர்ம உறுப்பையும் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பழனியை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், ஜம்மனபுதூர் கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையின்போது தப்பியோட முயன்ற பழனியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பழனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தது: எனக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் எனக்கும், அதே பகுதியை சேர்ந்த குட்டியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர், இருவரும் கேரளாவில் சென்று தனியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 6 மாதமாக குட்டியம்மாள் என்னுடன் பேச மறுத்து வந்தார். பின்னர் நான் ஊரில் வந்து விசாரித்து பார்த்ததில் குட்டியம்மாளுக்கு சிவக்குமாருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி சிவகுமாரிடம் நான் கேட்டபோதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால், நான் சிவகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நேற்றுமுன்தினம் இரவு ஊரின் ஏரிப்பகுதியில் மறைவான இடத்தில் காத்திருந்தேன். நள்ளிரவு 1 மணியளவில் குட்டியம்மாள் வீட்டிற்கு சென்ற சிவகுமாரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் மீது தூவி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர், கேரளாவுக்கு தப்பிச்சென்றுவிடலாம் என்று பஸ்சுக்காக காத்திருந்தபோது போலீசார் பிடித்துவிட்டனர். என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.