ஆம்பூர், பிப்.21: ஆம்பூர் அருகே வனப்பகுதிகளில் இரண்டாவது நாளாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி மற்றும் பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி துருகம் காப்புக்காடுகள் உள்ளது. ஆந்திர கவுண்டன்ய வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது வனத்துறையினரும், நக்சல் தடுப்பு போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சிறப்பு இலக்கு படையினர் (எஸ்டிஎப்), நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 18ம் தேதி சாரங்கல் குந்தேலி மூலை பகுதியில் தொடங்கிய தேடுதல் வேட்டை ஊட்டல் தேவஸ்தானம் பகுதி வரை நடந்தது. இரவு முழுவதும் காப்புக்காடுகளில் தங்கி முகாமிட்டனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா? துப்பாக்கி சத்தம் போன்றவைகள் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டனர்.