நாகர்கோவில், பிப்.20: ராஜாக்கமங்கலம் அருகே 84 ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் வளமான கடல் பகுதிகளை கொண்டதாகும். இதனால் இந்த பகுதியில் கடல் வாழ் ஆமைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிடுவது வழக்கம். இந்த முட்டைகளை மனிதர்கள் எடுத்து உணவாக உட்கொள்ள தொடங்கினர். இவ்வாறு முட்டைகளை அழிப்பதால் ஆமை இனங்கள் அழியும் நிலை உருவானது. இதையடுத்து ஆமைகளை பாதுகாக்கும் வகையில் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தென்பாற்கடற்கரை பகுதியில் ஆமை பொரிப்பகம் உருவாக்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம் துறை, ஆயிரங்கால் பொழிமுகம், தெற்குறிச்சி, அழிக்கால், வீரபாகுபதி, சொத்தவிளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து ஆமை முட்டைகளை சேகரித்து பொரிப் பகத்துக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு கடந்த ஜனவரி 2ம் தேதியில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி வரை மொத்தம் 2,533 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. முட்டைகள் பொரிப்பதற்கு வைத்த 45 நாட்களில் குஞ்சு பொரிக்கும். அதன்படி ஜனவரி 2ம் தேதி வைக்கப்பட்ட 112 முட்டைகள் 45 நாட்களுக்கு பின் பார்க்கப்பட்டன. அதில் மொத்தம் 84 முட்டைகளில் குஞ்சு பொரிக்கப்பட்டு இருந்தன. இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை ராஜாக்கமங்கலம் தென்பாற்கடலில் நடைபெற்றது.