விளாத்திகுளம், பிப். 20: விளாத்திகுளம் அடுத்த குமரெட்டியாபுரம் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.