புதுச்சேரி, பிப். 20: முதல்வர், அமைச்சர்களுடனான சந்திப்பு பல்வேறு பிரச்னைகளை தெளிவுப்படுத்த உதவியதாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்ட தர்ணா நேற்று முன்தினம் நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கவர்னர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில் சகஜ நிலை திரும்பி உள்ளது. இதனிடையே முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கவர்னர் கிரண்பேடி உடனடியாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கவர்னர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி மேற்கொண்ட தர்ணா முடிவுற்றது. முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலருடனான சந்திப்பு பிரச்னைகளை தெளிவுபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவியது. இன்று (நேற்று) முதல் புதுச்சேரி அரசு வழக்கம்போல் பணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன்மூலம் கவர்னர் மாளிகையை காணவரும் பார்வையாளர்களுக்கான சாலை திறக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.