அவினாசி, பிப்.20: அவிநாசியில் வாகன போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி, நால்ரோடு சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் நிலையம் அருகில் ரோட்டின் இருபுறமும் அரசுப் பள்ளிகள்உள்ளன. மேலும் போலீஸ் நிலையம், ஓட்டல்கள், நகைக்கடைகள், வங்கிகள், கோயில், கிழக்குதேர்வீதி, வடக்குதேர்வீதி, கடைவீதி, மேற்கு தேர்வீதி ஆகிய நான்கு தேர்வீதிகளில் 12 திருமண மண்டபங்களும் உள்ளன.
மேலும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 150 மீட்டர் இடைவெளிக்குள் சேவூர் ரோடு பிரிவில், கிழக்கு தேர் வீதி மற்றும் மேற்கு தேர்வீதியிலும் இரண்டு நால்ரோடு சந்திப்புகள் உள்ளன. சென்னை, பெங்களூர், சேலம், கோவை திருப்பூர், சத்தி, புளியம்பட்டி, கோபி, நம்பியூர், மைசூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அவினாசிக்கு வருகின்ற அரசு, தனியார் பஸ்கள் லாரிகள், கார்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், திருப்பூர், புதிய திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு, பனியன் கம்பெனி வேலையாட்களை அழைத்து செல்லும் நூற்றுக்கணக்கான வேன்கள் மற்றும் பஸ்கள் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த நால் ரோடு சந்திப்பு வழியாகத்தான் செல்லவேண்டியதாக உள்ளது.