பேராவூரணி, பிப். 20: பேராவூரணி நகரில் 2 பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. எனவே உட்கார வசதியின்றி சாலையோரம் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு நூலகம் அருகிலும், பழைய பேருந்து நிலையத்திலும் சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டது. தற்போது இருக்கைகள் சேதமடைந்துள்ளது. ஒரு சில இருக்கைகளை சமூகவிரோதிகள் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு போதிய வசதி இல்லாத நிலை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி பேராவூரணிக்கு பேருந்துகளில் வந்து செல்லும் பொதுமக்கள் வெயில் காலம் துவங்கி விட்டதால் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் கஜா புயலால் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரைகளும் சேதமடைந்துள்ளது.