×

சின்னரெட்டியபட்டி ஆவுடைய லிங்கேஸ்வரர் கோயில் குன்னுடையார் மலையை சுற்றி பவுர்ணமி கிரிவலம்

தோகைமலை, பிப். 20: தோகைமலை அருகே வேண்டுவோர்களுக்கு வேண்டும் வரம் தரும் சின்னரெட்டியபட்டி ஆவுடையலிங்கேஸ்வரர் கோயில் மலையை சுற்றி மாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டியபட்டியில் 300 அடி உயரத்தில் 2.60 கி.மீ சுற்றளவு கொண்ட  பாறையால் ஆன குன்னுடையார் மலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் வேண்டுவோர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலித்து வருகிறது.
நேற்று மாசிமாதத்தின் பவுர்ணமி என்பதால் கிரிவலத்தில் கலந்து கொள்ள சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் வந்தனர்.
முன்னதாக மலை மீது உள்ள கோயிலில் அலங்கரிக்கப்பட்ட ஆவுடைய லிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அதனை தொடர்ந்து ஓதுவார்கள் பல்வேறு சிவன் பாடல்களை பாடிக்கொண்டு ஆவுடைய லிங்கேஸ்வரன் குன்னுடையார் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் மலை மீது சிறப்பு அலங்காரம் செய்யபட்ட ஆவுடையலிங்கேஸ்வரர், ஆவுடைநாயகி பரிவார சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஆர்.டி. மலை விராச்சிலை ஈஸ்வரர் மலைக் கோயில்களிலும் மாசிமாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள்  நடந்தது.

Tags : Lingaswara Temple ,Chinnaradeepatti Aundu ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...