திருமங்கலம் அரசு பள்ளி எதிரே விபத்து சாலையில் வேகத்தடை வேண்டும்

திருமங்கலம், பிப்.20: திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் நுழைவு வாயில் மும்முனை சந்திப்பு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியும், அதற்கு நேர் எதிராக தனியார் மெட்ரிக் மேலநிலைப்பள்ளியும் உள்ளன. இதனால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த சாலையை கடந்து இரண்டு புறமும் பள்ளிகளுக்கு செல்கின்றனர். மாணவர்களை பள்ளியில் இறக்கி விட பெற்றோர்களின் வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவைகளும் அதிகளவில் இந்த பகுதியை காலை, மாலை நேரத்தில் முற்றுகையிடுகின்றன. இதுபோல் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி, சோழவந்தான், காண்டை செக்காணுரணி மற்றும் திருமங்கலம் அரசு டிப்போவிற்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை கடந்து செல்கின்றன.

இதனால் அடிக்கடி விபத்துகள் உண்டாகின்றன. இந்த இடத்தில் சாலையை அகலப்படுத்திய போது ஏற்கனவே இருந்த வேகத்தடைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். வேகத்தடைகள் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் உண்டாகின்றன. இந்த இடம் மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, உசிலம்பட்டி ரோடு ஆகிய மும்முனை சந்திப்பு பகுதியாக இருப்பதால் அதிகளவில் நெரிசல் உண்டாகிறது. எனவே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகளை அமைக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: