கொடைக்கானல் நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்த 12 கடைகளுக்கு சீல்

கொடைக்கானல், பிப். 20: கொடைக்கானல் நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. கொடைக்கானலில் ஏரி, பிரையண்ட் பூங்கா, கலையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 கடைகள் உள்ளன. நகராட்சிக்கு வாடகை செலுத்தி இக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இக்கடைகளின் வாடகை பாக்கி அதிகமாக எகிறியது. இதை ஆய்வு செய்து நடவடிக்கும்படி கமிஷனர் முருகேசன் அறிவுறுத்தினார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று வாடகை பாக்கி அதிகமாக வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து வருவாய் அலுவலர்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானல் நகராட்சிக்கு கடைகளில் இருந்து மட்டுமே ரூ.4 கோடியே 7 லட்சம் வாடகை பாக்கி உள்ளது. முதற்கட்டமாக 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகள் விரைவில் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உடனே வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: