அரக்கோணம், பிப்.20: அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் கால்வாயை சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அரக்கோணம் நகராட்சி கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல், நேற்று காலையும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 10 மணியளவில் அரக்கோணம்- ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரக்கோணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருள்தாஸ், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர்.