கிழக்கு கடற்கரை சாலையில் இடியும் நிலையில் வான்மீகி கோயில்:விபத்து அபாயம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை நடுவில் அமைந்துள்ள வான்மீகி முனிவர் கோயிலின் சுவர்கள் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்  ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் திருக்கோயில் பழமை வாய்ந்த திருத்தலம். இக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு  நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் மேற்கு  கோபுரம் அருகே கிழக்கு கடற்கரை  சாலையின் நடுவே, இக்கோயிலுக்கு சொந்தமான வான்மீகி முனிவர் கோயில் உள்ளது. மருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வான்மீகி முனிவர் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இக்கோயிலின் மேற்பகுதியை சுற்றி கருங்கற்களால் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்  அமைக்கப்பட்ட இந்த சிலாப்புகள் தற்போது வலுவிழந்து ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகின்றன. கோயிலின் சுற்றுச்சுவர்களும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த கோயிலை ஒட்டி வலதுபுறத்தில் காய்கறி மார்க்கெட்டும், இடதுபுறத்தில் பஸ் நிறுத்தமும் உள்ளது. பஸ் நிறுத்தம் மற்றும் மார்க்கெட் பகுதிக்கு செல்பவர்கள் இந்த கோயிலின் அருகே தான் சாலையை கடந்து செல்கின்றனர்.  தற்போது, வலுவிழந்து காணப்படும் கோயிலால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இக்கோயிலை சீரமைக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: