கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொம்மை வியாபாரிக்கு கத்திக்குத்து

சென்னை: திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையை சேர்ந்தவர் பரசுராமன் (52). இவர், மெரினா கடற்கரையில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவரது கடையில் குன்றத்தூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (57)  வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரசுராமன், கடையில் வேலை செய்த பன்னீர்செல்வத்திற்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரசுராமன் விபத்தில் படுகாயமடைந்தார். எனவே, கடையை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டார். எனவே, தான் கொடுத்த ரூ.10 ஆயிரத்தை பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம்  கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பரசுராமன் வீட்டிற்கு சென்று பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த  பன்னீர்செல்வம், தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து பரசுராமனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த பரசுராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பரசுராமன் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு  செய்து பன்னீர்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: