குறை தீர்க்கும் முகாம்: ஆர்.டி.ஓ. பங்கேற்காததால் பொதுமக்கள் வாக்குவாதம்...ஆலந்தூரில் பரபரப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், மனுக்களை பெற ஆர்டிஓ வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை கொடுப்பதற்காக நேற்று காலை முதல் தாசில்தார்  அலுவலகத்தில்  காத்து கிடந்தனர். ஆர்.டி.ஓ. நாராயணன்  வந்த பிறகு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள்  பெறுப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மதியம் வரை ஆர்.டி.ஓ. அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆலந்தூர்  தாசில்தார் ராஜேஸ்வரி பொதுமக்களை சமாதானப்படுத்தி  கோரிக்கை மனுக்களை பெற்றார்.  இதில் நிறுத்தப்பட்ட முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன், பட்டா கேட்டும், பட்டா மாற்றம் கேட்டும் 200க்கும்  மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

Related Stories: