சேலையூர் பகுதிகளில் 770 கண்காணிப்பு கேமரா: கமிஷனர் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: சேலையூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 770 கண்காணிப்பு கேமராக்களை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். சேலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 770 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை  நடந்தது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு 770 கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தெற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, புனித தோமையர்மலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் வினோத்  சுந்தரம், ஆய்வாளர்கள் செல்லப்பா, விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், ‘‘சிசிடிவி கேமராக்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் செல்போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள்  குறைந்துள்ளன. செல்போன் பறிப்பில் ஈடுபடுவோர், அவற்றை வெளி மாநிலங்களில் விற்பனை செய்கிறார்கள். சிசிடிவியால் உண்மையான குற்றவாளிகள் விரைவிலேயே பிடிபடுகின்றனர். டிஜிகாப் ஆப் மூலம் தொலைந்த செல்போன்களை ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் கண்டுபிடிக்கலாம். உடனுக்குடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதால் குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள்  பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க முன்வர வேண்டும்,’’ என்றார்.

Related Stories: