சென்னை, பிப். 19: லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது, கேரள பெண் ஒருவர் உடை மாற்றும் காட்சிகள் வரவேற்பு அறையில் இருந்த டிவியில் ஓடியதை பார்த்து, அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், உறவினர் இல்ல திருமணத்திற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் 46 பேருடன் நேற்று முன்தினம் ரயில் மூலம் சென்னை வந்தார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அப்போது, விடுதியின் வரவேற்பு அறையில் சுரேஷ் அமர்ந்திருந்த போது, அங்குள்ள டி.வி.யில் விடுதியின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவு ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு கேமரா பதிவில் தனது உறவினர் பெண் ஒருவர், அறையில் உடைமாற்றும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த அவர், உடனே விடுதி வரவேற்பு அறையில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.பின்னர் சுரேஷ் சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடை மாற்றிய அறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பெண் உடை மாற்றும் போது அறையின் முன் கதவு மூடப்படவில்லை. இதனால் அறைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் அறைக்குள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.