×

துணை நடிகை தூக்கில் தொங்கிய வழக்கு 50 சவரன் நகை, பணத்துக்காக மகளை கொன்றனர்: காதலன், நண்பர் மீது தாய் பரபரப்பு புகார்

சென்னை, பிப். 19: என் மகள் தற்கொலை ெசய்து கொள்ளவில்லை, காதலன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக துணை நடிகையின் தாய், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்  அளித்துள்ளார்.சென்னை ஜி.கே.எம். காலனியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 12ம் தேதி துணை நடிகை ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த எஸ்தர் பியூலா ராணி(42) போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கு, இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் யாஷிகா சினிமாவில் நடித்து வந்தார். அவருக்கும் சென்னை ஜிகேஎம் காலனியை சேர்ந்த மோகன்பாபு(எ) அரவிந்த் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, அவர்கள்  அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். இதற்கிடையே கடந்த 12ம் தேதி என் மகள் யாஷிகா, எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பி இருந்தார். அதை பார்த்து நான் உடனே மகளை தொடர்பு கொள்ள  முயன்றேன்.

ஆனால் அவரது போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அதே இடத்தில் வசிக்கும் அஜித் என்பவருக்கு போன் செய்தேன். அவர், உங்கள் மகள் தூக்கிட்டு இறந்துவிட்டார் என்று கூறினார்.நான் சென்னை வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், என் மகள் உடல் இருந்தது. பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைத்த போது, நான் என் மகளை புதைக்க சொன்னேன். ஆனால் மோகன் பாபு நண்பர் அஜித்  எரிக்கலாம் என்று கூறினார். அதற்கு நான் என் மகள் சாவில் மர்மம் உள்ளது.இதனால் எரிக்க கூடாது என்றேன். பின்னர் மயானத்திற்கு வந்த பிறகு என் மகள் உடலை எரித்து விட்டனர்.

பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது பொருட்கள் உடைந்து அலங்கோலமாக இருந்தது. என் மகள் வைத்திருந்த 50 சவரன் நகை மற்றும் பணம் எதுவும் இல்லை. நகை பணத்துக்காக மோகன்பாபு மற்றும் அஜித் ஆகியோர் தான்  என் மகளை கொலை செய்துள்ளதாக எனக்கு சந்தேகம் வந்துள்ளது. என் மகள் 3 மாதம் கர்ப்பமாகி, இறப்பதற்கு முன் கர்ப்பம் கலைந்து இருப்பதற்கான ஆதாரம் வீட்டில் இருந்தது. இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார்  அளித்தேன். ஆனால் என் புகாரை போலீசார் ஏற்கவில்லை.
எனவே, என் மகளை கொலை ெசய்து தடயங்களை அழித்த மோகன் பாபு அவரது நண்பர் அஜித் அதற்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...