கூடுவாஞ்சேரி, பிப், 19: காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீரப்பாக்கம் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால், பஸ் வசதி அந்த சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், பஸ் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கீரப்பாக்கம் சாலையில் பல லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
தாம்பரத்தில் இருந்து கண்டிகை, கூடுவாஞ்சேரியில் இருந்து ஊரப்பாக்கம் வழிகளில் கீரப்பாக்கம் வரை இயங்கும் அரசு பஸ்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என அனைவரும், இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. பணியினை விரைந்து முடித்து, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.