பெரும்புதூர், பிப்.19: பெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது இப்பகுதியில் உள்ள சில வீடுகளில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெரும்புதூர் ஒன்றியம் கீவளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள், கீவளூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். தற்போது கீவளூர் பகுதியில் குடிசை தொழில்போல் ஒரு சில வீடுகளில் அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி பெரும்புதூர் போலீசாருக்கு பலமுறை புகார் கொடுத்தும், அதை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கையூட்டு பெற்று கொண்டு,நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும் வடமாநில வாலிபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.எனவே இப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
₹2 லட்சம் மிக்சி ஜார்கள் நாசம்
பெரும்புதூர்: பூந்தமல்லி அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மிக்சி சார்கள் எரிந்து நாசமானது.பூந்தமல்லி அருகே திருமழிசையில் மிக்சி ஜார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து திருப்போரூர் அருகே தாழம்பூர் குடோனுக்கு செல்ல 3126 ஜார்கள் மினி லாரியில் நேற்று கொண்டு செல்லப்பட்டது. டிரைவர் சுந்தர் (45) மினி லாரியை ஓட்டி சென்றார். தொழிற்சாலை காவலாளி கனிராம் ரானா (42) உடன் ெசன்றார்.வண்டலூர்- மீஞ்சூர் சாலை வழியாக மினி லாரி சென்று கொண்டிருந்தது. தாம்பரம் அடுத்த எருமையூர் அருகே சென்றபோது, திடீரென மினி லாரியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த டிரைவர், வாகனத்தை உடனடியாக நிறுத்தி கீழே இறங்கினார். ரானாவும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் மினி லாரி தீப்பற்றி எரிந்தது. டிரைவரும் காவலாளியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். அதற்குள், மினி லாரியில் இருந்த அனைத்து மிக்சி ஜார்களும் எரிந்து சாம்பலானது. அதன் மொத்த மதிப்பு ₹2 லட்சம் என கூறப்படுகிறது. புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.