ஈரோடு, பிப். 15: ஈரோட்டில் வரி சீராய்வு முறையாக மேற்கொள்ளாத வருவாய் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாநகராட்சி சார்பில் அதிகபட்சமாக குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி சீராய்வு குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு அவர்களிடமிருந்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலத்திற்குட்பட்ட 6, 7, 8, 9 ஆகிய வார்டுகளில் வரி சீராய்வு செய்ய வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ் நியமிக்கப்பட்டார். ஆனால், இவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் முறையாக வரிசீராய்வு தொடர்பான விண்ணப்பம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கவில்லை.
இதையடுத்து, வரி சீராய்வு தொடர்பான விண்ணப்பங்களை பெற்று மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ்க்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் முறையாக ஒப்படைக்காததால் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சுந்தரராஜ்க்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அவர் வரிசீராய்வு முறையாக மேற்கொள்ளாதது தெரிய வந்தது. இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் உத்தரவிட்டுள்ளார்.