திருப்பூர், பிப்.15: ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறும் திட்டத்துக்கான சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளதாவது:
பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்காக வருவாய் கிராமங்கள் தோறும் அரசு அலுவலர்களை கொண்ட கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி இந்த கணக்கெடுப்பு பணி மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணித்து விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யாமல் உள்ள தகுதியான சிறு, குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். எனவே, விவசாயிகள் தங்களது பட்டா, நில உரிமையாளரின் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.