×

மன்னார்குடி அருகே பின்பக்க கதவை உடைத்து அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி

மன்னார்குடி, பிப்.15:    மன்னார்குடி அருகே பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள் பீரோவை உடைத்ததில் நகைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
   மன்னார்குடி அருகே அசேசம் ராஜராஜன் நகரில் வசிப்பவர் முகமது அபூபக்கர்(54). இவரின் மனைவி ரசியாபானு(48). இவர் ராதா நரசிம்மபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு ரசியாபானு பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலை வீட்டிற்கு வந்த அவர் முன்புறம் இருந்த கதவை திறக்க முயற்சித்த போது பூட்டு திறக்கவில்லை. அதனால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பின்புறத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது முன்புற கதவு உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் ரசியாபானு வீட்டின் அறைக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்துள்ளது.  பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்தபோது அதில் தங்க  நகைகள் மற்றும் பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர். மேலும் நகை கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த மர்ம நபர்கள் அங்கு மேஜையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றனர். ஆனால் ஆசிரியை ரசியாபானு பீரோவில் தனது தங்க நகைகளை வைக்காமல்  வீட்டில் வேறு ஒரு இடத்தில் மறைவாக வைத்து சென்றதால் அந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மன்னார்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றப்பிரிவு எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் நேரில் சென்று கொள்ளை முயற்சி நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவாரூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர். இதுகுறித்து ஆசிரியை  ரசியாபானு மன்னார்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : state school teacher ,Mannargudi ,house ,
× RELATED மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி