முத்துப்பேட்டை, பிப்.15: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகத்தில் புயல் நிவாரண தொகையை வழங்காத வங்கி நிர்வாகத்தை கண்டித்து இன்று நடக்கவிருந்த தொடர் உண்ணாவித போராட்டம் அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம், ஊராட்சி ஒன்றியத்தில் பெரியது. இங்கு 50க்கும் மேற்பட்ட கிராமம் புயலின் கோரத்தாண்டவத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் உள்ள ஐஓபியில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்படி நிவாரண தொகையை இப்பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எடுக்க வங்கிக்கு சென்றதுபோது. அந்த நிவாரண தொகையை அவரவரின் விவசாய கடனில் வரவு வைக்கப்பட்டதாக வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கண்டிப்பாக கடன் தொகையில் தான் பணத்தை வரவு வைப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வங்கி நிர்வாகத்தை கண்டித்து இன்று (15ம்தேதி) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து துண்டு பிரசுரமும் வெளியிட்டனர். நேற்று (14ம்தேதி) தினகரனில் செய்தியும் வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக வங்கியின் திருத்துறைப்பூண்டி வட்ட மேலாளர் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த இருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் யோகநாதன், சமூக ஆர்வலர் கோவிந்தராசு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வந்த நிவாரண தொகையை விவசாய கடனில் வரவு வைக்காமல் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடக்க இருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.