திருவாரூர், பிப்.15: எல்ஐசியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய ஊழியர்கள் உறுதி எடுத்துகொள்ள வேண்டும் என தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். எல்ஐசி ஊழியர் சங்கமான தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் 1962ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி துவங்கப்பட்டதையடுத்து 58வது ஆண்டு தினத்தையொட்டி திருவாரூரில் நேற்று எல்ஐசி அலுவலகம் முன்பாக ஊழியர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்கள் சார்பில் வாயில் கூட்டமானது எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையிலும், கிளை பொறுப்பாளர்கள் நிதிஷ்சண்முகசுந்தர், பூங்குன்றன் மற்றும் முகவர் சங்க தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைவர் தெட்சிணாமூர்த்தி பேசுகையில், ஊழியர்களின் போராட்டங்கள் காரணமானவே எல்ஐசி எனப்படும் மாபெரும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக இன்றுவரை காக்க முடிந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள், தொழிலாள வர்க்கத்தினர் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கிடையிலும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு 49 சதவீதமாக அதிகரித்ததுள்ளது. இதன் விளைவாக தனியார் நிறுவனங்களின் மூலதனம் அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் வேலை இழப்பு போன்றவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் சேமிப்பு குறைந்துள்ளதால் அதன் தாக்கமானது எல்ஐசி பிரிமியம் வருவாயிலும் எதிரொலிக்கிறது. உயர்தர வர்க்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் சாமானிய மக்களுக்கும் காப்பீடு வழங்கி வரும் எல்ஐசியின் வளர்ச்சியில் தற்போது ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேக்க நிலையை உடைத்தெறிய ஊழியர்கள் அனைவரும் உறுதி எடுத்துg;கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.