தூத்துக்குடி, பிப். 15: தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக 7,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்நிலையில் இத்தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு பயிற்சியளிப்பது, வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்கும் முகாம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்த டி.ஆர்.ஓ. வீரப்பன் முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அளவிலான அதிகாரிகள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம் செய்யப்படும் பணி நடந்துவருகிறது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்வது குறித்து அனைத்து வாக்குச்சாவடி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.