கோவில்பட்டி, பிப். 15: புதிய ரேஷன்கடை அமைத்துதரக்கோரி கோவில்பட்டி அருகேயுள்ள சொக்கன்ஊரணி, ஆஸ்சிரமம் தெருவை சேர்ந்த மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் குடும்பஅட்டைகளை தரையில் போட்டு தர்ணாவிலும் ஈடுபட்டனர். கேவில்பட்டி நகராட்சிக்கு உள்ளிட்ட 21வது மற்றும் 22வது வார்டு பகுதியை சேர்ந்த சொக்கன்ஊரணி, ஏ.கே.எஸ்.தியேட்டர்ரோடு, ஆஸ்சிரமம் தெரு, முத்தானந்தபுரம் 1வது மற்றும் 2வது தெருவை சேர்ந்த, சந்தைபேட்டை தெருவை சேர்ந்த பொதுமக்கள் செக்கடி தெருவில் உள்ள ரேஷன்கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இதனிடையே இந்த ரேஷன்கடையை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த ரேஷன்கடையானது செக்கடி தெருவில் இருந்து, நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி அருகே இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இருப்பினும் இந்த ரேஷன் கடை தங்களது பகுதியில் இருந்து நீண்ட தொலைவில் உள்ளதால் சொக்கன் ஊரணி அல்லது முத்தானந்தபுரம் தெருவிலேயே புதிய ரேஷன்கடை அமைத்துத்தரக்கோரி 21வது வார்டு அதிமுக செயலாளர் சிங்கராஜ் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் தங்களது குடும்ப அட்டைகளை தரையில் போட்டு தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அளித்து சென்றனர்.