நடத்தை சந்தேகத்தில் மனைவிக்கு கத்திக்குத்து

சங்கரன்கோவில், பிப். 15:  கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள காரிசாத்தான் கம்பளத்து தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் பரமசிவன் (31). கூலி தொழிலாளியான இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ராமலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வேலை காரணமாக பரமசிவன் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கமாம். இந்நிலையில் பரமசிவனுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் ராமலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சேர்ந்து சமாதானம் செய்து கணவருடன் சேர்த்து வைத்தனர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வந்த பரமசிவன், நடத்தை சந்தேகத்தில் மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமலட்சுமி கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ராமலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தப்பியோடிய பரமசிவன், சங்கரன்கோவில் போலீசில் சரணடைந்தார். சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பரமசிவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: