நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் வழங்கும் இயந்திரத்தை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி

ஆத்தூர், பிப்.15: நரசிங்கபுரம் நகராட்சி 2வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை, நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நரசிங்கபுரம் நகராட்சி சார்பில், 2வது வார்டு சிவன் கோயில் தெருவில், பொதுமக்களுக்கு ₹7க்கு 20 லிட்டர்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான இயந்திரம் ₹15 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கடந்த 12ம்தேதி இரவு, மர்ம  நபர்கள் சிலர் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி  சார்பில் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம், பொதுமக்களுக்கு தினமும்  ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் கேன்  குடிநீர் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு வியாபாரம் முற்றிலுமாக  முடங்கியுள்ளது. இதனால், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் இந்த இயந்திரத்தை  உடைக்க முயன்றனரா என போலீசார் விசாரணை நடத்தி  வருகிறார்கள். இந்நிலையில், நேற்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்  அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. நகராட்சியில்  மற்ற வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் ேபாதும், சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: