ஆத்தூர், பிப்.15: கல்வராயன் மலையில் மூங்கில் மரங்களை சேதப்படுத்தும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கல்வராயன் மலைப்பகுதியில், ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன. வனத்துறையின் சார்பில் மூங்கில் உற்பத்தி செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலைகளின் இருபுறமும், ஏராளமான மூங்கில்கள் விளைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக, சமூக விரோத கும்பல், இரவு நேரங்களில் மூங்கிலை உடைத்து வீணாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கல்வராயன் மலையில் சாலையின் இருபுறமும் நன்கு விளைந்த மூங்கில் மரங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக சமூக விரோத கும்பல் இந்த மூங்கில்களை முறித்து போட்டு வீணடித்து வருகிறார்கள். இதுகுறித்து பல முறை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து கல்வராயன் மலையில் உள்ள மூங்கில் மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.