கிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரியில், உலக புற்று நோய் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. 5 ரோடு ரவுண்டானா அருகே தொடங்கிய இப் பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் ரோடு, காந்தி ரோடு வழியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது. இந்த பேரணியில், பத்மாவதி மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மணணவிகள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் புகையிலை தவிர்த்தல், மது உள்ளிட்ட போதை பொருட்களை தவிர்த்தல், புற்று நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து முழுவதும் குணமடைவது குறித்து வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறு சென்றனர். தொடர்ந்து, கலெக்டர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், வன்முறை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ் மற்றும் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.