திருச்செங்கோடு, பிப்.15: திருச்செங்கோட்டில் நடைபெற்ற ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான மாநில அளவிலான பயிற்சி மற்றும் தேர்வு முகாமில் 130 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திரிசாரணர், திரிசாரணியர்களுக்கான மாநில அளவிலான கவர்னர்(ராஜ்ய புரஷ்கார்) விருதுத் தேர்வு முகாம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற முகாமை கல்வி நிறுவன செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், மேலாண் இயக்குனர்கள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் சாரண இயக்க வரலாறு, நிலப்படம், முதலுதவி, கயிற்றுக்கலை, பகுத்தறியும் திறன், உலகளாவிய சாரண இயக்க அமைப்பின் நோக்கங்கள், சமூக மேம்பாட்டு திட்டங்களில் மாணவர்களது பங்கேற்பு உள்ளிட்டவை சோதித்தறியப்பட்டது. முகாமை சென்னை ஜெய்னுலாபுதின் தென்னக ரயில்வே சங்கீதா, கோவை சக்தி கைலாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நடத்தினர். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், மாவட்ட முதன்மை ஆணையருமான உஷா, முதல்வர் பூர்ணபிரியா, மாவட்ட தலைமையிட ஆணையர் குமார், பயிற்சி ஆணையர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல், கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த திரிசாரணர், திரிசாரணியர்கள் 130 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு கல்வி மாவட்ட செயலர் விஜய், ரகோத்தமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.