கரூர், பிப். 15: கரூர் தாந்தோணிமலை பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரு நாய்களை பிடித்து குக செய்து திரும்ப அனுப்பி வைக்கும் முயற்சியை நகராட்சி மேற்கொண்டது. தற்போது அந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளதால் நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், வெங்ககல்பட்டி, வேலுசாமிபுரம் போன்ற பகுதிகளில் தெரு நாய்களின் வளர்ச்சி அதிகளவு உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வேலை முடித்து எளிதாக செல்ல முடியாத நிலையே நிலவி வருகிறது. மேலும், சிறுவர், சிறுமிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சிவசக்தி நகரில் அதிகளவு தெரு நாய்களின் நடமாட்டம் காரணமாக, இந்த பகுதியினர் பீதியில் உள்ளனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.