வேலூர், பிப்.15:தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வேலூரில் 4 அரசுப்பள்ளிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வழங்கிய கல்வி உபகரணங்களை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வழங்கினார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அரசுப்பள்ளிகளுக்கு தேவையானதை அரசே செய்ய முடியாது. பொதுமக்களும் அரசுப்பள்ளிகளின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களால் இயன்ற பங்களிப்பை அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி கல்வி சீர்வரிசை நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி பொதுமக்கள் வழங்கும் அனைத்து பொருட்களையும் ஏதாவது ஒரு துறை அலுவலர் மூலம் பெற்று அதுபற்றி பதிவேட்டில் குறித்து வைப்பதுடன், அதுதொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியிருந்தார்.