வேலூர், பிப்.15: பிரசவத்தின் போது மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்பு சென்னை கொண்டு செல்வதில் மத்திய அமைச்சர் வருகை காரணமாக ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா புவனகிரியை சேர்ந்தவர் இன்ஜினியர் கவுதம்ராஜ். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த கோகிலா(24) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்தது.இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து போளூரில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஆபத்தான நிலையில் கடந்த 4ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோகிலாவுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்தது தெரிந்தது. தொடர்ந்து கடந்த 7ம் தேதி அவருக்கு குறைபிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.பிரசவம் முடிந்த நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த கோகிலாவுக்கு நேற்று அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். குழந்தை தொடர் சிகிச்சையில் உள்ளது. இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக அவரது கணவர் கவுதம்ராஜ் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார்.