வேலூர் சிறைகளில் தொடர் உண்ணாவிரதம் முருகன், நளினி உடல்நிலையை கண்காணிக்க டாக்டர்கள் நியமனம் பேச்சுவார்த்தை தோல்வியால் அதிகாரிகள் திணறல்

வேலூர், பிப்.15: வேலூர் சிறைகளில் தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன், நளினியின் உடல்நிலையை கண்காணிக்க அரசு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. ஆனால், இதுவரை அவர்கள் விடுதலை குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், விடுதலை விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அவரது மனைவி நளினியும் கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ேமலும், கவர்னருக்கும் நளினி உருக்கமான கடிதமும் அனுப்பி வைத்தார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 8வது நாளாக நேற்று முருகன், நளினியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதற்கிடையில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு நேற்று முன்தினம் சிறை மருத்துவமனையில், சிறை மருத்துவர்கள் மூலம் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதேபோல், பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியும் உடல் சோர்வாக காணப்படுகிறார். இருவரின் உடல்நிலையும் தொடர்ந்து சோர்வடைந்து வருவதால் அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் பலமுறை நளினி-முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

Related Stories: