புதுச்சேரி, பிப். 15: புதுவை முதல்வரின் அரசியல் விளையாட்டை நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தின் காரணமாக புதுச்சேரியில் போராட்டம் வெடித்துள்ளது. 39 கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக கவர்னர் மாளிகை முன் முதல்வர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஜ்நிவாசில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார். பின்னர் அவர் வரும் 20ம் தேதி புதுச்சேரி திரும்பவுள்ளார்.இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியின் தற்போதைய நிலவரம் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புதுச்சேரியில் மோட்டார் வாகன சட்டத்தின்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வரின் அனுகுமுறை குறித்து உங்கள் கவனத்துக்கு சில விஷயங்களை கொண்டுவர விரும்புகிறேன். ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு வார விழா மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.