கெங்கவல்லி, பிப்.14:நடுவலூர் ஊராட்சியில் பொக்லைன் மூலம் நூறுநாள் வேலை திட்ட பணி மேற்கொண்டதை கண்டித்து, பிடிஓ எச்சரிக்கை விடுத்ததால் அதிர்ச்சியடைந்த பெண்கள், நேற்று மாலை கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. நடுவலூர் ஊராட்சியில், இந்த திட்டத்தில் பொது மக்களுக்கு பணி வழங்காமல், பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொள்வதாக, சேலம் கலெக்டர் ரோகிணிக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவுவின் பேரில், கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், நேற்று காலை நடுவலூர் ஊராட்சியில் பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது அவர் அங்கு பணியில் ஈடுபட்டவர்களிடம், இப்பணிகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். பொக்லைன் மூலம் செய்வதற்கா திட்டம் அறிவிக்கப்பட்டது.
இனிமேல் இதுபோல் புகார் வந்தால், நடுவலூர் ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டப்பணிகள் நிறுத்தப்படும் என எச்சரித்து விட்டு சென்றார். அதிகாரி எச்சரித்தது போல், பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டால், என்ன செய்வது என அச்சமடைந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இயந்திரம் பயன்படுத்தாமல், இனிமேல் மக்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.